Monday, June 28, 2010

மார்க்சியம் என்றால் என்ன? பகுதி-5 (உபரி மதிப்பு கோட்பாடு)

இந்த உபரி மதிப்பை எப்படி கணக்கிடுவது

நம்முடைய உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்
இதில் இரண்டு வழி முறைகள் உள்ளன, முதலாளித்துவ வழிமுறை, மார்க்சிய வழிமுறை
முதலில் முதலாளித்துவ வழிமுறையைப் பார்ப்போம்

நிலம், கட்டிடம் இவற்றின் ஒரு நாள் வாடகை = 10 ரூபாய்
மின்சார செலவு = 10 ரூபாய்
இயந்திரத்தின் ஒரு நாள் வாடகை = 10 ரூபாய்
மூலப் பொருள் = 100 ரூபாய்
கூலி (12 மணிநேர உழைப்புக்கு) = 100 ரூபாய்

இவற்றில் நிலம், கட்டிடம், இயந்திரம் ஆகியவை நிலைத்த மூலதனம் என்றும், மின்சார செலவு, மூலப் பொருள், கூலி ஆகியவை சுற்றோட்ட மூலதனம் என்றும் பிரிக்கப்படுகிறது.

உபரி மதிப்பின் வீதம் = (உபரி உழைப்பின் மதிப்பு / மொத்த மூலதனம்) X 100
8 மணிநேர உழைபுக்கு 100 ரூபாய் கூலி என்றால், 12 மணிநேரத்துக்கு 150 ரூபாய் ஆகும்.

எனவே உபரி உழைப்பின் மதிப்பு 50 ரூபாய் ஆகிறது.
உபரி மதிப்பின் வீதம் = (50/230)X100 = 21.73% ~ 20% ஆகிறது.
முதலாளித்துவ சமூகம் உபரிமதிப்பை இப்படிதான் கணக்கிடுகிறது.

ஆனால் மார்க்ஸ் இது தவறு என்று நிரூபிக்கிறார்: எப்படி

மார்க்சிய வழிமுறை

உபரி மதிப்பை கணக்கிடும் போது எந்த மூலதனம் உபரியை தருகிறதோ அதை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும், மொத்த மூலதனத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது.
அதாவது மார்க்ஸ் மூலதனத்தை இரண்டு பிரிவுகளாக பிரிக்கிறார்

நிலம், கட்டிடம், இயந்திரம், மின்சார செலவு, மூலப்பொருள் இவை எல்லாம் உபரி மதிப்பை தோற்றுவிப்பதில்லை என்பதால் இவை மாறா மூலதனம் எனப்படுகிறது.

கூலி மட்டுமே உபரி மதிப்பைத் தோற்றுவிப்பதால், அது மட்டுமே மாறும் மூலதனம் ஆகும். இதை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்

உபரி மதிப்பின் வீதம் = (உபரி உழைப்பின் மதிப்பு / மாறும் மூலதனம்) X 100
உபரி மதிப்பின் வீதம் = (50 / 100) X 100 = 50%

எனவே முதலாளித்துவ அறிஞர்கள் சொல்வது போல, உபரி மதிப்பின் வீதம் 20% அல்ல, அது 50% என்பதை மார்க்ஸ் நிரூபிக்கிறார்.

8 மணிநேர உழைப்புக்கான கூலியை பெற்றுக் கொண்டு ஒரு தொழிலாளி 12 மணிநேரம் உழைக்கிறார். கூடுதலான அந்த 4 மணிநேர உழைப்பின் மதிப்பை முதலாளி எடுத்துக் கொள்கிறார். ஏன்,

உற்பத்திசாதனங்கள் (நிலம், கட்டிடம், இயந்திரம்) எல்லாம் முதலாளிக்கு சொந்தமாக இருக்கிறது.
தொழிலாளிக்கு தன்னுடைய உழைப்பு சக்தியைத் தவிர வேறு எதுவுமே சொந்தமாக இல்லை.
இதனாலேயே, உபரி மதிப்பை முதலாளி எடுத்துக் கொள்வது என்பது நியாயப்படுத்தப்படுகிறது. இயந்திரம், கட்டிடம் எல்லாம் வானத்தில் இருந்து வந்தவை அல்ல, அதுவும் தொழிலாளர்களின் உழைப்புதான். இதைதான் மார்க்ஸ் இறந்த கால உழைப்பின் மீது நிகழ்கால உழைப்பு வினை புரிகிறது என்றார்.

(உற்பத்தி சாதனங்கள் எல்லாம் ஒரு தனி மனிதனுக்கு எப்படி சொந்தமானது என்பது தனி வரலாறு.)

நம்முடைய உதாரணத்தில் 270 ரூபாய் மதிப்புக்கொண்ட நூலை 230 ரூபாய்க்கே தயாரித்துவிடுகிறார் அந்த முதலாளி. அதில் 50 ரூபாய் உபரிமதிப்பு என்று ஆகிறது.
250 ரூபாய்க்கு மொத்த வியாபாரியிடம் விற்று 30 ரூபாயை தான் எடுத்துக்கொள்கிறார்.
மொத்தவியாபாரி, 260 ரூபாய்க்கு சில்லறைவியாபாரியிடம் விற்று 10 ரூபாயை தான் எடுத்துக் கொள்கிறார்.

சில்லறைவியாபாரி, அதன் உண்மை மதிப்பான 270 ரூபாய்க்கு நுகர்வோரிடம் விற்று 10 ரூபாயை தான் எடுத்துக் கொள்கிறார்.
இப்படியாக ஒரு தொழிலாளியால் உற்பத்தி செய்யப்பட்ட உபரிமதிப்பை, இந்த சமூகம் பலவாறாக தனக்குள் பிரித்துக்கொள்கிறது.

இவ்ளோதாங்க உபரி மதிப்புக் கோட்பாடுங்கறது.

இப்பொழுது மூலதனம் என்றால் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.
50 ரூபாயில் 30 ரூபாயை எடுத்துக்கொண்ட அந்த முதலாளி, அதில் 20 ரூபாயை தன்னுடைய செலவுக்கு எடுத்துக் கொண்டு மீதி 10 ரூபாயை தன்னுடைய தொழில் விருத்திக்காக பயன்படுத்துகிறார் என்றால்
அந்த 10 ரூபாய் தான் மூலதனம் எனப்படும்.
உபரிமதிப்பின் எந்த பகுதி மீண்டும் உபரிமதிப்பைத் தோற்றுவிக்கப் பயன்படுத்தப்படுகிறதோ, அந்த பகுதியே மூலதனம் எனப்படும்.

மூலதனம் உபரிமதிப்பை தோற்றுவிக்கும்,
உபரி மதிப்பு மூலதனத்தை பெருக்கமடைய செய்யும்.

மூலதனமும், உபரிமதிப்பும், இரண்டு எதிர் எதிர் கூறுகள் (இயங்கியலின் முதல் விதியான ‘எதிர்கூறுகளின் ஒற்றுமையும், போராட்டமும்’ என்ற விதியை இங்கு நினைகூர்க)

கூலியையும், உபரிமதிப்பையும் முறையே தொழிலாளியும் முதலாளியும் எந்த விகிதத்தில் பிரித்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் முதலாளித்துவ அறிஞர்கள் கணக்கிட்டார்கள்.

பிரச்சனையின் தீர்வாக, இருவரும் அதை (கூலியயும், உபரி மதிப்பையும்) நியாயமான முறையில் பிரித்துக்கொள்ள வேண்டும் என்றுதான் அவர்கள் கூறினார்கள்.

முதலாளித்துவ அறிஞர்கள் பிரச்சனையின் முடிவை எந்த இடத்தில் கண்டார்களோ, அதே இடத்தில்தான் பிரச்சனையின் ஆணிவேர் இருக்கிறது என்று மார்க்ஸ் நிரூபித்தார்.

முலதனத்துக்கும், உபரி மதிப்புக்கும் உள்ள இந்த முரண்பாட்டால், முதலாளித்துவ சமூகத்தில் ஏற்படும் அளவு மாற்றம் எப்படி இருக்கும் என்பதை இனி பார்க்கலாம்.

முதலாளி உபரி மதிப்பை எப்படி அதிகரிக்கலாம் என்றுதான் அனுதினமும் சிந்தித்துக் கொண்டிருப்பார்.
அவருக்கு இரண்டு வழிகள் உள்ளன.
1. கூலி கொடுக்கப்படாத உபரி உழைப்பு நேரத்தை அதிகப்படுத்துவது.
2. அவசியமான உழைப்பு நேரத்தை குறைப்பது

கூலி கொடுக்கப்படாத உபரி உழைப்பு நேரத்தை அதிகப்படுத்துவது.
முதலாளித்துவத்தின் ஆரம்பத்தில் ஒரு நாளின் வேலை நேரம் என்பது 16 மணி என்று கூட இருந்தது. தொழிலாளர்களின் இடைவிடாத போராட்டத்தால் அது 8 மணிநேரமாக குறைக்கப்பட்டது.

உபரி உழைப்பின் நேரத்தை அதிகப்படுத்துவதில் ஒரு எல்லை உண்டு, அதாவது தொழிலாளிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அவரால் தொடர்ந்து வேலைக்கு வர முடியாமல் போய்விடும்.

எனவே முதலாளிகள் இரண்டாவது வழியை பின்பற்ற ஆரம்பித்தார்கள்

அவசியமான உழைப்பு நேரத்தை குறைப்பது.
நம்முடைய உதாரணத்தில் அவசியமான உழைப்பு நேரம் 8 மனி நேரம் என்று பார்த்தோம். அதாவது 230 ரூபய் மதிப்பிலான ஒரு பொருள் 8 மணி நேரத்தில் தயாரிக்கப்படுகிறது. புதிய தொழில் நுட்பத்தின் காரணமாக அதே 230 ரூபய் மதிப்பிலான பொருள் 4 மணி நேரத்தில் தயாரிக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம்.
என்ன ஆகும்?

இன்னொரு 4 மணி நேர உழைப்பு உபரி உழைப்பு என்றாகிறது.
ஒரு நாளின் 12 மணி நேர வேலை நாளில் முதலில் அவசியமான உழைப்பு நேரம் 8 மணி நேரம் என்றும், உபரி உழைப்பின் நேரம் 4 மணி நேரம் என்றும் இருந்தது,

இப்பொழுது அவசியமான உழைப்பு நேரம் 4 மணி நேரம் என்றும், உபரி உழைப்பின் நேரம் 8 மணி நேரம் என்றும் ஆகிறது.

ஒரு பொருளின் மதிப்பு உழைப்பின் கால அளவை பொருத்தது என்று ஏற்கனவே பார்த்தோம்.
8 மணி நேரத்தில் தயாரிக்கப்படும் ஒரு பொருள் 4 மணி நேரத்தில் தயாரிக்கப்பட்டால் அதன் மதிப்பு பாதியாக குறையும். எனவே எந்த ஒரு முதலாளியும் தங்களின் தொழில் நுட்பத்தை வெளியிடமாட்டார்கள். தாங்கள் மட்டுமே அதை பயன்படுத்தி லாபம் பார்ப்பார்கள். எல்லா முதலாளிகளும் அந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தால், அந்த பொருளின் மதிப்பும் குறைந்துவிடும், பிறகு மீண்டும் வேறொரு தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு முதலாளிகள் தள்ளப்படுவார்கள்.

எனவே முதலாளித்துவம், சுய லாபத்திற்காக தொழில் நுட்ப வளர்சியை துரிதப்படுத்தியே தீர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறது,

எந்த சமூக அமைப்பின் காலக்கட்டத்திலேயும் இல்லாத தொழில் நுட்ப வளர்ச்சி முதலாளித்துவ சமூகத்தில் நடைபெறுவதற்கு காரணம் இதுதான்.

தொழில்நுட்பம் வளர வளர உபரி மதிப்பும் அதிகமாகிறது, எனவே மூலதனமும் அதிகமாகிறது.

மூதலாளித்துவ பொருளாதார உற்பத்தி முறை என்பது வரைமுறையற்ற உற்பத்தியைக் கொண்டுள்ளது. எனவே ஒரே பண்டத்தை உற்பத்தி செய்யும் முதலாளிகள் தங்களுக்குள் போட்டியிடுகின்றனர். தொழில் நுட்ப வளர்ச்சியால் ஒருசில முதலாளிகள் மற்ற முதலாளிகளை வீழ்த்தி பெரு முதலாளிகள் ஆகின்றனர், தோற்கடிக்கப்பட்ட முதலாளி பாட்டாளி வர்க்கத்துடன் சேர்ந்து விடுகிறார்.

பாட்டாளிகள் பெருக பெருக அவர்கள் அமைப்பு ரீதியில் அணிதிரண்டு புரட்சி செய்யும் போது, சமூக மாற்றம் ஏற்படும், அது ஒரு சோஷியலிச அரசாக இருக்கும்.

மார்க்சியம் என்றால் என்ன? பகுதி-4 (உபரி மதிப்பு கோட்பாடு)

ஒரு தொழிற்சாலை தொடங்க என்னென்ன தேவைப்படும்

1. நிலம், கட்டிடம்
2. இயந்திரங்கள்
3. மூலப் பொருள்
4. மின்சாரம் இன்ன பிற
5. தொழிலாளி

இந்த ஐந்தும் இருந்தால்தான் ஒரு தொழிலை தொடங்க முடியும்

உதாரணத்திற்கு இங்கு நாம் பஞ்சிலிருந்து நூல் நூற்கும் ஒரு தொழிற்சாலைக்குள் நுழைவோம்.

M1 - C1 - P - C2 - M2

இதில் M1 (Money) என்பது
ஒரு முதலாளி நிலம் / கட்டிடம், இயந்திரங்கள், மின்சாரம், தொழிலாளி இவற்றிற்க்காக செலவிடும் தொகை எனலாம்.

C1 (Commodity) என்பது மூலபொருளாகிய பஞ்சு
P (Process) என்பது உற்பத்தியைக் குறிக்கும்
உற்பத்திக்கு பிறகு மூலப்பொருள் உறுமாற்றம் (C2) அடைகிறது. கூடவே அதன் மதிப்பும் (M2) உயருகிறது.
M2 - M1 = m
இங்கு m என்பது உபரிமதிப்பு எனப்படும்.

இந்த உபரி மதிப்பு எப்படி உற்பத்தியாகிறது.
இயந்திரங்கள் உபரி மதிப்பை உற்பத்தி செய்கிறதா?

நிச்சயமாக இல்லை, ஒரு இயந்திரத்தின் மதிப்பு 10000 ரூபாயும், அதன் வாழ்நாள் 1000 நாளும் என்றால், அந்த இயந்திரம் ஒவ்வொருநாளும் 10 ரூபாய் மதிப்பை மட்டுமே பஞ்சிலிருந்து நூலுக்கு பெயர்க்கும். அதை காட்டிலும் அது அதிகமாக (உபரியாக) ஒரு ரூபயைக்கூட கொடுக்காது.

நிலம், கட்டிடம், மினசாரம் ஆகியவைகளும் அப்படிதான், அதன் மதிப்பை அப்படியே உற்பத்திப் பொருளுக்கு பெயர்க்குமே தவிர உபரியாக (கூடுதலாக) ஒரு ரூபாயைக் கூட பெயர்க்காது.

சரி, மூலப்பொருளினால் உபரிமதிப்பு உற்பத்தி செய்யப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. ஒரு மூட்டை பஞ்சின் விலை 100 ரூபாய் என்றால், மூலப்பொருள் உறபத்தியாளரிடமிருந்து நாம் அதை 100 ரூபாய் கொடுத்துதான் வாங்கியிருப்போம். ஒரு வேளை நாம் அதை அவரிடம் பேரம் பேசி 90 ரூபாய்க்கே வாங்கினால், 10 ரூபாய் லாபம் வந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். உண்மையில் அந்த பத்து ரூபாய் என்பது அவர் அடைந்த நஷ்டம் தானே ஒழிய வேறில்லை, அவரின் நஷ்டம் இவருக்கு லாபம் என்றாகிறதே ஒழிய, அது உபரி மதிப்பை தோற்றுவிப்பதில்லை.

மீதி இருப்பது தொழிலாளியின் உழைப்பு ஒன்றுதான். அது மட்டும்தான் உபரியை தோற்றுவிக்க முடியும், அது எப்படி என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பு நாம் விலை மற்றும் கூலி ஆகியவைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

விலை என்றால் என்ன?
ஒரு பண்டத்தின் மதிப்பை பணதொகையின் மூலமாக சொல்வதுதான் விலை எனப்படும்.
விலையை எப்படி நிர்ணயிப்பது?
அந்த பண்டத்தை செய்வதற்கு ஆகும் செலவுதான், அதன் விலை எனப்படும்.
நம்முடைய உதாரணத்தில்
நிலம், கட்டிடம் இவற்றின் ஒரு நாள் வாடகை = 10 ரூபாய்
மின்சார செலவு = 10 ரூபாய்
இயந்திரத்தின் ஒரு நாள் வாடகை = 10 ரூபாய்
மூலப் பொருள் = 100 ரூபாய்
உழைப்பு சக்த்தியின் மதிப்பு (கூலி) = 100 ரூபாய்
மொத்தம் = 230 ரூபாய்
எனவே 100 ரூபாய் மதிப்பு கொண்ட ஒரு மூட்டை பஞ்சானது, தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் போது 230 ரூபாய் மதிப்பு கொண்ட நூல் என்ற இன்னொரு பண்டமாகிறது.
அந்த நூலின் விலை 230 ரூபாய் ஆகும். அதன் மீது கூடுதலாக ஏற்றப்பட்ட மதிப்பு 130 ரூபாய் ஆகிறது. இப்பொழுது முதலாளி அந்த நூலை விற்பனை செய்ய வேண்டும். அவர் அதை 230 ரூபாய்க்கே விற்கிறார் என்றால், அவருக்கு துளியும் லாபம் கிடைக்காது. எனவே அதை அவர் 230 ரூபாயை விட குறைவான செலவிலேயே உற்பத்தி செய்ய முற்படவேண்டும்.

கூலி என்றால் என்ன?
ஒரு பண்டத்தின் விலை என்பது, அதை உற்பத்தி செய்ய ஆகும் செலவவுக்கு சமம் என்பதைப் போலவே, தொழிலாளியின் குறிப்பிட்ட மணிநேர உழைப்புக்கு கொடுக்கும் கூலியானது, அதை அந்த தொழிலாளி மறு உருவாக்கம் செய்து கொள்ளும் செலவுக்கு சமம் ஆகிறது.
அதாவது ஒரு தொழிலாளி உண்ன உணவு, உடுக்க உடை, இருக்க இடம், தனக்கு பிறகு இன்னொரு தொழலாளியை உருவாகும் விதமாக தன் குடும்பத்தை பராமரிக்க ஆகும் செலவு, என்ற இவற்றின் மொத்த தொகையையே கூலியாக பெறுகிறார்.

உண்மையான கூலி என்றால் என்ன?
முதலாளித்துவ சமூகத்தில் ஒரு பண்டமானது சந்தையில் விற்பனைக்கு வருவது போலவே, தொழிலாளியின் உழைப்பு சக்த்தியும் ஒரு பண்டமாக விற்பனைக்கு வருகிறது. அதை முதலாளிகள் வாங்க முற்படுகிறார்கள்.
8 மணிநேர (ஏன் 8 மணி நேரம் என்பதை பிறகு விளக்குகிறேன்) உழைப்புக்கு 100 ரூபாய் கூலி என்று ஒப்பந்தம் போட்டு வேலைக்கு எடுக்கிறார்கள் என்றால், முடிவில், முதலாளிக்கு ஒரு பைசாவும் லாபமாக கிடைக்காது. எனவே, இதைக் கருத்தில் கொண்டே முதலாளிகள் தொழிலாளர்களிடம் முதலிலேயே 12 மணிநேரத்தை வேலைநேரமாக சொல்லி விடுகிறார்கள்.
எனவே, 8 மணிநேரத்திற்கான கூலியாக தொழிலாளி 100 ரூபாயைப் பெற்று கொள்கிறான், ஆனால், முதலாளிக்காக மேலும் 4 மணி நேரம் கூடுதலக வேலை செய்கிறான். அந்த நேரத்தில் உற்பத்தியாகும் மதிப்புதான் உபரி மதிப்பு ஆகும்.

நிலம், கட்டிடம், இயந்திரம், மூலப்பொருள் இவையெல்லாம் உபரியை தோற்றுவிக்காது என்பதால், அவர் ஒரு தொழிலாளியிடம் இருந்துதான் இதை அபகரிக்க முடியும்.
நரம்பும், சதையையும் கொண்ட ஒரு தொழிலாளியால்தான், உபரிமதிப்பைத் தோற்றுவிக்க முடியும்.

எனவே ஒரு தொழிலாளியின் உழைப்பு நேரத்தை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்.
1. அவசியமான உழைப்பு நேரம் (இதன் மதிப்பை தொழிலாளி கூலியாக பெற்று விடுகிறார்)
2. உபரி உழைப்பு நேரம் (இதன் மதிப்பை முதலாளி அபகரித்துக் கொள்கிறார்)

இந்த உபரி மதிப்பை எப்படி கணக்கிடுவது

மார்க்சியம் என்றால் என்ன? பகுதி-3 (உபரி மதிப்பு கோட்பாடு)

மார்க்சிய பொருளியல்
இதில் உபரி மதிப்பு கோட்பாடு குறித்து விளக்கப்படுகிறது

பொருளாதாரத்தின் அடிப்படைகளாக முதலில் நாம் பார்க்க வேண்டியது இவைதான்
1. பண்டம் அல்லது சரக்கு (commodity) என்றால் என்ன?
2. மதிப்பு
1. பயன் மதிப்பு என்றால் என்ன?
2. பரிவர்த்தனை மதிப்பு என்றால் என்ன?
3. மதிப்பு என்றால் என்ன?
3. பணம் என்றால் என்ன?
4. லாபம் என்றால் என்ன?
5. உபரி மதிப்பு என்றால் என்ன?

ஒரு பொருளின் அடிப்படை அலகு அணு எனப்படுவது போல,

ஒரு உயிரின் அடிப்படை அலகு செல் எனப்படுவது போல,

பொருளாதாரத்தின் அடிப்படை அலகு பண்டம் அல்லது சரக்கு (commodity) எனப்படும்.

1. பண்டம் அல்லது சரக்கு (commodity) என்றால் என்ன?
நாம் நம்முடைய வீட்டில் இருந்து தண்ணீரை எடுத்து நாமே பயன்படுத்திக் கொண்டால் அந்த தண்ணீர் ஒரு பொருள்தான். ஆனால் அதையே ஒரு பாட்டிலில் அடைத்து சந்தையில் வைத்து விற்றால், அது பண்டம் ஆகிறது

விற்பதற்க்காகவே உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் சரக்கு எனப்படும்.

சரக்கு என்பது மதிப்புகளை கொன்டது.
1. பயன் மதிப்பு
2. பரிவர்த்தனை மதிப்பு
3. மதிப்பு

பயன் மதிப்பு:
தண்ணீர் குடிக்க பயன்படுகிறது, புத்தகம் படிக்க பயன்படுகிறது, பேனா எழுத பயன்படுகிறது. இவ்வாறு ஒரு பண்டம் அதன் பயன்பாட்டைப் பொருத்து மதிப்பிடப்படுவது பயன் மதிப்பு எனப்படும்.
பயன்பாடு அல்லாத ஒரு பொருள் பண்டமாவதில்லை.

பரிவர்த்தனை மதிப்பு:
இது சந்தையில் தேவை மற்றும் அளிப்பு (demand and supply) விதியைப் பொருத்து மாறுபடும்.
மக்களுக்கு தேவை (demand) அதிகமாக இருந்தால் அந்த பண்டத்தின் மதிப்பு அதிகரிக்கும். சந்தையில் அளிப்பு (supply) அதிகமாக இருந்தால் அதன் மதிப்பு குறையும், இதுவே சந்தைகான பொது விதி. (ஆனால் ஒவ்வொரு பண்டமும் அதன் உண்மையான மதிப்புக்குதான் விற்கப்படுகிறது என்பதை பிறகு பார்க்கலாம்)

மதிப்பு:
பயன்மதிப்பு மற்றும் பரிவர்த்தனை மதிப்பு அல்லாமல் ஒவ்வொரு பண்டத்திற்கும் உண்மையான மதிப்பு என்று ஒன்று உண்டு,

தங்கத்தின் மதிப்பு ஏன் அதிகமாக இருக்கிறது, செங்கல்லின் மதிப்பு ஏன் குறைவாக இருக்கிறது,
பயன்பாட்டை பொருத்து மதிப்பு அதிகரிக்குமா என்றால், இல்லை, ஏனெனில், தங்கத்தின் பயன்பாட்டை விட தண்ணீரின் பயன்பாடுதான் அதிகம், பயன்பாட்டை பொருத்து என்றால் தண்ணீரின் விலைதான் தங்கத்தின் விலையை விட அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் நிஜத்தில் அப்படி இருப்பதில்லை.

உண்மையில், ஒரு பொருளின் மதிப்பை நிர்ணயிப்பது என்றால், அதன் மீது செலவிடப்பட்ட மனித உழைப்பைக் கொண்டுதான் நிர்ணயிக்க வேண்டும்.

அதன்படி தங்கத்தின் மிது செலவிடப்பட்ட உழைப்பின் அளவு அதிகம். ஆனால் செங்கல்லின் மீது செலவிடப்பட்ட உழைப்பின் அளவு குறைவு. எனவேதான் தங்கத்தின் மதிப்பு என்பது தண்ணீரின் மதிப்பை விட அதிகமாக உள்ளது.

ஒருவேளை நாளை யாராவது, புதிய ரசவாதத்தால் செங்கல்லை தங்கமாக மாற்றுகிறார் என்றால், என்ன ஆகும், தங்கத்தின் மதிப்பு செங்கல்லின் மதிப்புக்கு இறங்கிவிடும்.
எனவே ஒரு பண்டத்தின் மதிப்பு என்பது அதன் மீது செலவிடப்பட்ட உழைப்பின் அளவைப் பொருத்தது.

சரி, உழைப்பின் அளவை எப்படி நிர்ணயிப்பது?

உழைப்பின் அளவு என்பது அதன் கால அளவை பொருத்தது. அதாவது, அந்த பண்டத்தை தயாரிப்பதற்காக ஆகும் நேரத்தை பொருத்தது.

ஒரு பண்டத்தின் மதிப்பு என்பது தனியானதல்ல, அது ஒரு ஒப்பீட்டு வடிவம் ஆகும். அதாவது, ஒரு புத்தகம் செய்வதற்கு 2மணிநேரம் ஆகிறது என்றால், இதை மட்டும் வைத்துக் கொண்டு அதை மதிப்பிட முடியாது. ஒரு பேனா செய்வதற்கு 1மணிநேரம் ஆகிறது என்றால் இப்பொழுது, ஒரு புத்தகத்தின் மதிப்பு என்பது 2 பேனாக்களின் மதிப்பிற்கு சமம் எனலாம். இதுதான் ஒப்பீட்டு வடிவம் என்பது. மதிப்பை இப்படித்தான் நாம் அளவிட முடியும்.

3. பணம்
மதிப்பு என்பது ஒரு ஒப்பீட்டு வடிவம் என்று பார்த்தோம். ஒரு புத்தகத்தின் மதிப்பு என்பது 2 பேனாக்களின் மதிப்பிற்கு சமம் என்றால், இரண்டிலும் சம அளவிலான உழைப்பு செலவிடப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

இதை வேறு விதமாக சொல்வதென்றால், இரண்டு மனிநேர உழைப்பைக் கொண்டுள்ள அனைத்து பண்டங்களும் ஒன்றுக்கொன்று சமம் எனலாம். இவற்றை பரிமாறிகொள்ளும் போது பல நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டன. எனவே எல்லாவற்றிற்கும் பொதுவான ஒரு பண்டம் தேவைப்பட்டது.

அதாவது 1புத்தகம் = 2பேனா = அரை கிராம் தங்கம் (உதாரணத்திற்கு) என்றால் இங்கு அரைகிராம் தங்கம் பணமாக கொள்ளப்படுகிறது. இது நாமாக ஏற்படுத்திகொண்ட அமைப்புதானே ஒழிய தங்கம் தான் பணமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எதையெதையோ வைத்துப் பார்த்து இறுதியாக தங்கத்தை பணமாக வைத்தார்கள் நம் முன்னோர்கள்.
எனவே பணம் என்பது பண்ட பரிமாற்றத்திற்கான ஒரு விசேஷ பண்டம்தானே ஒழிய வேறில்லை.
பணம் என்பது முதலாளித்துவ சமுதாயத்தில் தோன்றிய பண்டம் அல்ல, பணம் அடிமை சமுதாயத்திலேயே தோற்றுவிக்கப்பட்டுவிட்டது.
இந்த பணம்தான் முதலாளித்துவ சமூதாயத்தில் எப்படி மூலதனமாகி ஆட்டிப் படைக்கிறது என்று இனிமேல் பார்க்க இருக்கிறோம்.

4. லாபம்
சமநேர உழைப்பைக் கொண்டுள்ள அனைத்து பண்டங்களும் ஒன்றுக்கொன்று சமம் என்றால், இதில் லாபம் என்பது எங்கிருந்து வருகிறது என்று பார்க்க வேண்டும் அல்லவா?
ஒரு வியாபாரி ஒரு பண்டத்தை வாங்கி அப்படியே இன்னொருவரிடம் விற்கிறார் என்றால் அவருக்கு லாபம் எப்படி வருகிறது?

உதாரணமாக:
உண்மையில் ஒரு சில்லறை வியாபாரி 100 ரூபாய் மதிப்பிலான ஒரு பண்டத்தை 90 ரூபாய்க்கே வாங்கி விடுகிறார். அதை 100 ரூபாய் என்று நுகர்வோரிடம் விற்று 10 ரூபாய் லாபம் பார்க்கிறார்.

ஒரு மொத்த வியாபாரியும் 100 ரூபாய் மதிப்பிலான அதே பண்டத்தை 80 ரூபாய்க்கே வாங்கி 90 ரூபாய் என்று சில்லறை வியாபாரியிடம் விற்று 10 ரூபாய் லாபம் பார்க்கிறார்.
இதேபோல் ஒரு முதலாளி 100 ரூபாய் மதிப்பிலான அந்த பண்டத்தை, 60 ரூபாய்க்கே தயாரித்து விடுகிறார், அதை 80 ரூபாய்க்கு விற்று 20 ரூபாய் லாபம் பார்க்கிறார்.
இது எப்படி சாத்தியம் ஆகிறது?

முதலாளி ---- மொத்த வியாபாரி ---- சில்லறை வியாபாரி ---- நுகர்வோர்

இந்த தொடர் வரிசையில் பண்டம் உற்பத்தியாகும் இடத்திற்கே சென்று ஆய்வு செய்தால் மட்டுமே அதன் புதிரை விடுவிக்க முடியும்.

எனவே மார்க்சிய ஆர்வலர்களாகிய உங்களுடன் சேர்ந்து ஒரு பண்டம் உற்பத்தியாகும் இடத்திற்குள் நுழைவோம் வாருங்கள்,

மாரிக்சியம் என்றால் என்ன? பகுதி-2 (வரலாற்று இயக்கவியல் பொருள் முதல் வாதம்)

இயக்கவியல் பொருள் முதல் வாதம்:

பொருள்களில் ஏன் மாற்றம் வருகிறது?
இதற்கு இயக்கவியலை சற்று புரிந்து கொள்வது அவசியம்.

இயக்கவியலில் மூன்று முக்கியமான விதிகள் உண்டு
1. எதிர்கூறுகளின் ஒற்றுமையும் போராட்டமும்.
2. அளவு மாற்றம் பன்பு மாற்றமாக மாறுதல்.
3. நிலை மறுப்பின் நிலை மறுப்பு.

இந்த மூன்று விதிகளும்,

1. இயற்கை
2. மனித சமுகம்
3. மனித சிந்தனை
மூன்றிற்கும் பொருந்தும்.

எதிர்கூறுகளின் ஒற்றுமையும் போராட்டமும்

அண்டத்தில் உள்ள அனைத்தும் மாறிக்கொண்டிருக்கின்றன, அந்த மாற்றத்திற்கு காரணம் அதன் உள் முரண்பாடுகளே. முரண்பாடுகளின் இரண்டு கூறுகளும் ஒன்றையொன்று எதிர்க்கும், ஆனால் ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை.

இயற்கையில், பகல் – இரவு, வெப்பம் – குளிர்
மனித சமூகத்தில், உற்பத்தி சாதனங்களும் – உற்பத்தி உறவுகளும்
மனித சிந்தனையில், நனவு மனம் – நனவிலி மனம்

அளவு மாற்றம் பன்பு மாற்றமாக மாறுதல்

எல்லாவற்றிலும் ஏற்படும் அளவு மாற்றம் வெளிப்படையாக தெரியாது, அளவு மாற்றத்தின் காரணமாக ஒரு கட்டத்தில் அது பண்பு மாற்றமாக மாறும்.

இயற்கையில், niiநீரை கொதிக்க வைக்கும் போது அதன் வெப்பநிலையில் ஏற்படுவது அளவு மாற்றம், 100 டிகிரியை தொட்டதும் நீர் ஆவியாவது பண்பு மாற்றம்.
மனித சமூகத்தில், அடிமை சமூகத்தில் ஏற்பட்ட அளவு மாற்றம் நிலப்பிரபுத்துவ சமூகம் என்ற பண்பு மாற்றத்திற்கு வழி வகுத்தது. நிலப்பிரபுத்துவ சமூகத்தில் ஏற்பட்ட அளவு மாற்றம் முதலாளித்துவ சமூகம் என்ற பண்பு மாற்றத்திற்கு வழி வகுத்தது.
மனித சிந்தனையில், ஒரு செயலை சிந்தித்துக் கொண்டே (அளவு மாற்றம்) ஒரு கட்டத்தில் அதற்கான செயலில் ஈடுபடுவது. (பண்பு மாற்றம்)

நிலை மறுப்பின் நிலை மறுப்பு.

மாற்றத்தின் போது, எல்லாவற்றிலும் பழைய நிலையில் Uஉள்ள தேவையானவற்றை எடுத்துக்கொண்டு தேவையில்லாதவற்றை நீக்கி விடுவது.

இயற்கையில், விதையில் இருந்து செடி வரும்போது விதையில் இருந்து உயிர்த்தன்மையை எடுத்துக் கொண்டு விதையின் ஓடுகள் விலக்கப்படுகின்றன.
மனித சமூகத்தில், ஒரு சமூகத்தில் இருந்து மற்றொரு சமூகம் வரும்போது பழைய சமூகத்தின் தொழில் நுட்பங்களை எடுத்துக்கொண்டு அதன் உற்பத்தி உறவுகள் மாற்றியமைக்கப்படுகின்றன.
மனித சிந்தனையில், தேவையானவற்றை மட்டும் கொண்டு மற்றவற்றை புறக்கனிப்பது.

இயக்கவியலின் கருத்தினங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
1. தனியானதும், சிறப்பானதும், பொதுவானதும்.
2. காரணமும் விளைவும்.
3. இன்றியமயாமையும் தற்செயலும்.
4. சாத்தியமும் எதார்த்ததும்.
5. உள்ளடக்கமும் வடிவமும்.
6. சாராம்சமும் நிகழ்வும்.
இவை அனத்தும் இயக்கவியலின் கருத்தினங்கள் எனப்படும். ஒவ்வொன்றாக பார்ப்போம்.
1. தனியானதும், சிறப்பானதும், பொதுவானதும்
அனைத்து அம்சங்களும் ஒன்றாக உள்ள இரண்டு பொருளோ, நிகழ்வோ இந்த உலகத்தில் இல்லை. அதே சமயத்தில், உலகத்தில் உள்ள எல்லா பொருள்களிலும், நிகழ்வுகளிலும் நிச்சயமாக பொதுவான அம்சம் என்றும் ஏதாவது இருக்கும். உதாரணமாக, இரும்பை எடுத்துக் கொள்வோம், உயிரற்ற பொருள் என்ற அடிப்படியில் அது பொதுவானது. உலோகம் என்ற முறையில் அது சிறப்பானது. இரும்பு என்ற முறையில் அது தனியானது. தனியானது, சிற்ப்பானது, பொதுவானது இவை ஒன்றுக்கொண்று பிரிக்க முடியாதது

2. காரணமும் விளைவும்
ஒரு நிகழ்வு இன்னொரு நிகழ்வுக்கு இட்டுச் சென்றால்,
அந்த முதல் நிகழ்வு காரணம் எனப்படும் இரண்டாவது நிகழ்வு விளைவு ஆகும்.

காரணம் இல்லாமல் விளைவுகள் இருக்கவே முடியாது

3. இன்றியமையாமையும் தற்செயலும்
ஒரு நிகழ்வின் உள்ளார்ந்த செயல் இன்றயமையாதது,
வெளிப்புற தாக்கம் தற்செயல் ஆகும்.

உ.ம்: ஒரு முதலாளி ஒரு தொழிலாளியை வேலைக்கு அமர்த்துவது இன்றியமையாதது,
ஆனால் அவர் யாரை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்பது தற்செயலானது

4. சாத்தியமும் எதார்த்தமும்
தகுந்த நிலைமகளில் நடைபெறக்கூடியது சாத்தியம் எனப்படும்.
ஏற்கனவே நடைபெற்றிருப்பது எதார்த்தம் எனப்படும்.

எதார்த்தத்தை நிறைவேற்றப் பட்ட சாத்தியம் என்றும்.
சாத்தியத்தை எதிர்கால எதார்த்தம் என்றும் சொல்லலாம்.

5.உள்ளடக்கமும் வடிவமும்
வடிவமும் உள்ளடக்கமும் பிரிக்கப்பட முடியாதவை.
உள்ளடக்கம் வடிவத்தை நிர்ணயிக்கிறது.

முதலில் உள்ளடக்கம் மாறுகிறது, பிறகு அது அதற்கேற்ற வடிவத்தை பெறுகிறது.
புதிய வடிவம் உள்ளடக்கத்தை மாற்றுகிறது.

6. சாராம்சமும் நிகழ்வும்
ஒரு பொருளின் ஒட்டு மொத்த இயல்பும் சாராம்சம் எனப்படும்.
நிகழ்வு என்பது அதனால் ஏற்படும் வெளிப்பாடு ஆகும்.

லெனின் சாராம்சத்துக்கும், நிகழ்வுக்கும் இடையே உள்ள உறவை ஒரு ஆழமான வேகமான நீரோட்டத்துக்கு ஒப்பிட்டார்.
அதன் ஆழத்தையும் வேகத்தையும், கண்களுக்கு தெரிகின்ற அலைகளையும், நுரைகளையும் கொண்டுதான் மதிப்பிட முடியும் என்றார்.


வரலாற்று இயக்கவியல் பொருள் முதல் வாதம்:

இயங்கியலின் கோட்பாடுகளை

இயற்கைக்கு பொருத்திப்பார்ப்பது - டார்வினியம்
சிந்தனைக்கு பொருத்திப்பார்ப்பது - பிராய்டியம்
மனித சமூகத்துக்கு பொருத்திப்பார்ப்பது - மார்க்சியம்

இங்கு நாம் மார்க்சியம் பற்றி பேசுவதால் அதைப் பற்றி மட்டும் எடுத்துக் கொள்வோம்.
மனித சமூகம் எதன் அடிப்படையில் இயங்குகிறது என்பதை கண்டுபிடிக்க முடியுமா?
அதன் திசை வழியை நாம் அறிய முடியுமா?
முடியும் என்கிறது மார்க்சியம்.

இன்று உலகம் முழுவதும் பெரும்பாலும் முதலாளித்துவ சமூகம் உள்ளது,
ஆனால் ஒரு 500 ஆண்டுகளுக்கு முன் உலகெங்கும் மன்னராட்சிதான் நடைபெற்றது
எப்படி இது மாறியது?
தனிப்பட்ட மனிதர்களது வீரதீர செயலாலா?
உயர்ந்த தத்துவங்களினாலா?
இல்லவே இல்லை...

இவற்றிற்கெல்லாம் முன்பு மனிதன் என்பவனுக்கு
உண்ண உண்வு வேண்டும், உடுக்க உடை வேண்டும், இருக்க இடம் வேண்டும்
இவற்றிற்காக உற்பத்தியில் ஈடுபட வேண்டும். (இந்த உண்மை மிக எளிமையானது, ஆனால் புரிந்து கொள்ளப்படாதது.)

எனவே உற்பத்திமுறைதான் சமூகத்தின் வடிவத்தை தீர்மானிக்கிறது...
ஒவ்வொரு சமூகத்தின் உற்பத்தி முறையையும் ஆய்வு செய்தால், அந்த சமூகத்தின் வடிவத்தை புரிந்துகொள்ளலாம்


இயக்க விதிகளை மனித சமூக வரலாற்றுக்கு பொருத்தி பார்ப்பதுதான், வரலாற்று இயக்கவியல் பொருள் முதல் வாதம் எனப்படும்.

இதற்கு மார்க்ஸ் எடுத்துக் கொண்ட சமூக வரலாறு,
ஐரோப்பிய சமூக வரலாறு
1. ஆதி பொதுவுடைமை சமூகம்
2. அடிமைச் சமூகம்
3. நிலபிரபுத்துவ சமூகம்
4. முதலாளித்துவ சமூகம்

இந்த நான்கு சமூகமும் இயக்கவிதிகளுக்கு உட்பட்டு ஒன்றிலிருந்து ஒன்று மாறி வந்துள்ளது என்பதை மார்க்ஸ் நிரூபித்தார்.

ஒவ்வொரு சமூகமும் அதன் உள் முரன்பாடுகளால் (இயக்கவியலின் முதல் விதி) வளர்கின்றன, அதில் ஏற்ப்படும் அளவு மாற்றங்கள் ஒரு கட்டத்தில் பண்பு மாற்றங்களை (இயக்கவியலின் இரண்டாவது விதி) ஏற்படுத்துகின்றன, படைக்கப்பட்ட புதிய சமூகம், பழைய சமூகத்தில் இருந்து தேவையான தொழில்நுட்பங்களை எடுத்துக்கொண்டு தேவை இல்லாதவற்றை நீக்கி விடுகின்றன. இயக்கவியலின் மூன்றாம் விதி).

மனிதன் தோன்றிய போது

மனிதனுக்கு மனிதன் சுரண்டல் இல்லை (சுரண்டல் என்றால் என்ன என்பதை பிறகு பார்க்கலாம்),
வர்க்கம் இல்லை (வர்க்கம் என்றால் என்ன என்பதை பிறகு பார்க்கலாம்),
அரசு இல்லை,
போலீஸ் இல்லை,
ரானுவம் இல்லை,
குடும்ப அமைப்பு இல்லை,
அவ்வளவு ஏன், பொதுவுடைமை சிந்தனையும் இல்லை, ஆனாலும் அன்று
நம்மால் விரும்பப்படுகிற,
வருங்காலத்தில் வர இருக்கிற,
ஏற்கனவே ருஷ்யாவில் சோதித்தறியப்பட்ட,
பொதுவுடைமை சமுதாயம் நிலவியது என்றால் எப்படி?
அதன் உற்பத்தி முறைதான் காரணம்....

அதாவது, ஆதிமனிதனின் முதல் தொழில் வேட்டையாடுதல், சிங்கத்தை வேட்டையாட வேண்டும் என்றால் கல்லெரிந்துதான் கொல்ல வேண்டும்
(அன்றைய உற்பத்திசக்திகளின் வளர்ச்சி அவ்வளவுதான்) ஒருவர் மட்டும் கல்லெரிந்து சிங்கத்தை கொல்ல முடியாது, சிங்கம் இவரை கொன்று விடும்

எனவே, இருத்தலின் பொருட்டு (தான் உயிர் வாழ்தல் பொருட்டு), மனிதன் கூட்டமாக வாழ வேண்டிய கட்டாயம் இருந்தது.
கூட்டமாக வேட்டையாடுவது, அனைவரும் பகிர்ந்து உண்ணுவது. இதுவே ஆதிபொதுவுடைமை சமூகத்தின் நிலையாகும்.
இதற்கு காரணம் உற்பத்தி சக்த்திகளும்(வெறும் கல்லுதாங்க), உற்பத்தி உறவுகளும்தான்

(கல்லு எல்லருக்கும் சொந்தமுங்க, இது என் கல்லு, இது உன் கல்லு ன்னு யாரும் அப்ப சண்ட போட்டுக்கல)

சரி, இந்த ஆதிபொதுவுடைமை சமூகம் மறைந்து எப்படி அடிமை சமூகம் வந்தது என்பதை பார்க்க வேண்டும் அல்லவா?

இங்குதான் இயங்கியலின் மூன்று விதிகள் நமக்கு பயன்படுகின்றன.

முதல் விதி: முரன்பாடு (எதிர்கூறுகளின் ஒற்றுமையும் போராடமும்)
ஆதிபொதுவடைமை சமூகத்தில் மனிதனுக்கும் இயற்கைக்கும் தான் முரன்பாடு
மனிதன் இயற்கையோடு இடையறாது போராடினான் (உயிர் வாழ்தல் பொருட்டுதான்)
விளைவு: உற்பத்தி சக்த்திகள் வளர்ச்சி அடைந்தன (கல்லு கோடரி ஆச்சு, கோடரி ஈட்டி ஆச்சு, ஈட்டி வில் அம்பு ஆச்சு)
உற்பத்தி சக்திகளில் ஏற்படும் இந்த வளர்ச்சிதான்(இரண்டாவது விதி:அளவு மாற்றம்), ஒரு புதிய சமூக அமைப்புக்கு காரணமாக (பண்பு மாற்றமாகிறது) அமைகிறது (வரலாற்றில் இது தவிர்க்க முடியாதது)
நூறு பேர் சேர்ந்து செய்த வேலையை, உற்பத்தி சக்த்திகளின் வளர்ச்சியால் ஒருவர் மட்டுமே செய்ய முடிந்தது என்பது வர்க்க பிரிவினைக்கு வழிவகுத்தது.
வேட்டையாடுதல் என்ற தொழிலில் இருந்து முதல் உழைப்பு பிரிவினையான கைவினைத்தொழில் தோன்றியது (கோடரி, ஈட்டி செய்தல்).
கைவினைத்தொழில் செய்வோருக்கும் சேர்த்து மற்றவர்கள் வேட்டையாடினர்
காலப்போக்கில் கைவினைப்பிரிவினர் தொழிலில் தேர்ச்சி அடைந்தனர், அவர்களின் சிந்தனை சக்தியும் வளர்ந்தது.
உற்பத்தியும் பெருகியது, மிகையான உற்பத்தியை ஒரு குழு இன்னொரு குழுவிடம் பறிமாறிக்கொண்டது,

இப்படியாக ஒரு பிரிவு மக்கள் தீவிர உழைப்பில் இருந்து விடுபட்டனர்.
இவர்கள் ஆண்டைகள் ஆயினர், உழைக்கும் மக்கள் அடிமைகள் ஆயினர். ஒரு குழுவுக்கும் இன்னொரு குழுவுக்கும் இடையில் நடக்கும், சண்டையில் தோற்றவர்களில்
ஆன்கள் கொலைசெய்யப்பட்டனர், பெண்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர் (இனப்பெருக்கத்திற்காக).

ஒரு புதிய சமூக வடிவம் தோன்றியது. இதுவே அடிமைச் சமூகம் எனப்படும்.

அடிமைச் சமூகம்:

இதன் வளர்ச்சிக்கு காரணம் அதன் முதன்மை முரன்பாடான ஆண்டைகளும் அடிமைகளும் தான்(முதல் விதி)
அடிமைகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றம் (அளவு மாற்றம்), அதன் புரட்சிக்கு (பண்பு மாற்றத்திற்கு) வழிவகுக்கிறது.
அடிமை சமூகத்தில் ஒரு பிரிவு மக்கள் உழைப்பில் இருந்து முழுவதும் விடுபட்டு கலை, இலக்கியம், தத்துவம், என்ற இன்ன பிற துறைகளை வளர்த்தனர்.(மூன்றாவது விதி: நிலைமறுப்பின் நிலைமறுப்பு)

சாக்ரடீஸ் மிக சிறந்த சிந்தனையாளர்தான் ஆனால், அவர் அடிமை சமூகத்தை ஆதரித்தவர், "அடிமைகள் இல்லாமல் சமூகம் எப்படி இயங்கும் என்று கேட்டவர்"
அந்த சூழல் அவரை அதற்கு மேல் சிந்திக்க விட வில்லை என்பதே உண்மை (பொருளில் இருந்துதான் சிந்தனை வருகிறது என்பதை இங்கு நினைவுகூர்க)

இங்கு ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு முழுமையாக விற்கப்படுகிறான்.
அடிமையின் ஆற்றல், உழைப்பு, திறமை அனைத்தும் அவரை வாங்கிய ஆண்டைக்கே சொந்தமாகும்.
அடிமைக்கு என்று எதுவும் சொந்தம் இல்லை
அடிமை சமூகத்தில் ஏற்பட்ட அளவு மாற்றம் நிலப்பிரபுத்துவ சமூகத்துக்கு வழிவகுத்தது.

நிலப்பிரபுத்துவ சமூகம்:

இங்கு பண்ணயடிமைகள் தங்களுக்கான நிலத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் வேலை செய்ய வேண்டும்.
மீதி மூன்று நாள் நிலப்பிரபுக்களுக்காக வேலை செய்ய வேண்டும். (அதாவது விளைவதில் பாதி தனக்கு, மீதி நிலப்பிரவுக்கு)
இங்கு பண்னை அடிமை என்பவன் நிலத்தோடு பினைக்கப்பட்டவன்
நிலம் விற்கப்படும் போது நிலத்தோடு அவனும் விற்கப்படுவான். எனவே பண்ணை அடிமையை கொல்லும் அதிகாரம் நிலப்பிரபுவுக்கு கிடையாது.
(அடிமை சமூகத்தில் அடிமையை ஆண்டை கொல்லலாம்!).
எனவே பண்ணையடிமை அரை அடிமை ஆவான்.

இந்த விதத்தில் நிலப்பிரபுத்துவ சமூகம் என்பது, அடிமை சமூகத்தை விட முற்போக்கானது.
18ஆம் நூற்றாண்டு வரை நிலப்பிரபுத்துவ முறையே நிலவியது எனலாம். நீராவி இயந்திரம் கண்டுபிடிக்கப்படதுதான் (உற்பத்தி சக்த்திகளின் வளர்ச்சிதான்), சமூக மாற்றத்திற்கு வழிவகுத்தது. நீராவி இயந்திரங்களை சொந்தமாக கொண்டவர்கள், உற்பத்தியின் துரித வளர்ச்சிக்காக நிலப்பிரபுக்களோடு சண்டையிட்டனர். துனைக்கு பண்ணையடிமகளையும் அழைத்துக்கொண்டனர்.
இயந்திரங்களை மட்டுமே சொந்தமாகக் கொண்ட ஒரு வர்க்கம் தோன்றியது அப்பொழுதுதான்.
அது முதலாளி வர்க்கம் எனப்பட்டது.

(அடிமை சமூகத்தில் அடிமைகள்தான் செல்வம், நிலப்பிரபுத்துவ சமூகத்தில் நிலம்தான் செல்வம்).

நிலத்தில் கலப்பபையை மட்டுமே பயன்படுத்த தெரிந்த பண்ணையடிமைகளுக்கு, கல்வி கற்று கொடுக்க வேண்டிய கட்டாயம் முதலாளிகளுக்கு இருந்தது.

ஏனெனில் அப்பொழுதுதான் அவர் ஸ்பேனர் பிடித்து இயந்திரங்களில் வேலை செய்ய முடியும், பண்ணையடிமகளின் உதவியோடு, நிலப்பிரபுக்களை வீழ்த்தி முதலாளிகள் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள். இதுவே பிரெஞ்சு புரட்சியாகும். (கூடுதல் தகவலாக, நிலபிரபுக்களையும், முதலாளிகளையும் ஒரே நேரத்தில் வீழ்த்தி, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிறுவியது லெனின் தலைமையிலான ரஷ்ய புரட்சி)

எனவே பண்ணையடிமை என்பவன் இப்பொழுது ஒரு சுதந்திர தொழிலாளி ஆகிறான்.
ஆனால் இந்த தொழிலாளி இரண்டு வகையிதான் சுதந்திரம் உள்ளவன்.
1. ஒரு தொழிலாளி உழைக்கலாம் அல்லது உழைக்காமல் பட்டினி கிடந்து சாகலாம், இந்த சுதந்திரம் அவனுக்கு உண்டு.(அடிமையோ, பன்ணையடிமையோ உழைத்தேயாக வேண்டிய கட்டாயம் உள்ளவர்கள்)
2. ஒரு தொழிலாளி எந்த முதலாளியிடம் வேண்டுமானாலும் வேலைக்கு செல்லலாம், இந்த சுதந்திரனும் அவனுக்கு உண்டு.(அடிமையோ, பண்ணையடிமையோ முதலாளியைத்தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லாதவர்கள்.)

எனவே உற்பத்தி சாதனங்களை (இயந்திரங்களை) சொந்தமாக கொண்ட ஒரு (முதலாளி) வர்க்கம், உற்பத்தி சாதனங்கள் சொந்தமாக இல்லாத ஒரு (தொழிலாளி) வர்க்கத்தை முன் நிபந்தனையாக கொண்டிருக்கிறது.

இத்தகைய ஒரு சமூக அமைப்புதான் முதலாளித்துவ சமூக அமைப்பு எனப்படும்.
சமுதாயத்தின் பொருளுற்பத்திமுறைதான் அதன் அடிக்கட்டுமானம், கடவுள், மதம், நம்பிக்கை, அரசு, ராணுவம், தத்துவங்கள், இதெல்லாம் அதன் மேல் கட்டுமானங்கள்,

எனவே இன்றைய கட்டதில், அமைந்துள்ள முதலாளித்துவ சமூகத்தின் உற்பத்தி முறைகளை ஆய்வு செய்து, இயக்க விதிகளை பொருத்திப் பார்ப்பதன் மூலம் அடுத்து அமையப்போகும் சமூகத்தை நாம் முன்னறிவிக்க முடியும்.
அதற்கு நாம் பயில வேண்fடியது மார்க்சிய பொருளியல்.

-தொடரும்.

மார்க்சியம் என்றால் என்ன? பகுதி-1 (பொருள் முதல் வாதம்)

மார்க்சியம் என்பது மூன்று துறைகளை உள்ளடக்கியது,

1. மார்க்சிய மெய்யியல்
2. மார்க்சிய பொருளியல்
3. மார்க்சிய அரசியல்
ஒவ்வொன்றாக பார்ப்போம்.

1. மார்க்சிய மெய்யியல்
இதில் வரலாற்று இயக்கவியல் பொருள் முதல் வாதம் குறித்து பேசப்படுகிறது.

பொருள்:

பொருள் என்றால் என்ன?
பொருள் என்பது நமக்கு புறத்தே உள்ளது.

பொருளை எப்படி அறிவது?
ஐம்புலன்களின் வாயிலாக அறியப்படும் அனைத்தும் பொருள்கள்தான். கண்ணால், காதால், நாசியால், வாயினால் மற்றும் உடலால் உணரப்படுவது அனைத்தும் பொருள்கள். காற்று என்பதும் ஒரு பொருள்தான்.

கருத்து:

ஐம்புலன்களால் அறிய முடியாதவை என்று ஏதேனும் உண்டா?
ஆம். ஐம்புலன்களால் அறிய முடியாதவைகள் உண்டு. அவை அனைத்தும் கருத்து எனப்படும். நம் சிந்தனையில் உருவாகும் எதுவும் நாமாக வெளிப்படுத்தாத வரையில் மற்றவருக்கு தெரியாது. அவைகள்தான் கருத்து எனப்படும்.

பொருள் முதல் வாதம்:

பொருள்களை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பது அறிவியல் விதி. பொருளை நீங்கள் தூள் தூளாக உடைக்கலாமே தவிர அவற்றை அழிக்க முடியாது. அதன் வடிவங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருக்கும்.
பொருளின் வடிவங்களுக்கு வயது உண்டே தவிர,
பொருளுக்கு வயது கிடையாது.

கருத்தின் வயது என்ன?

கருத்து என்பது மனிதனுக்கு மட்டுமே சொந்தம். மற்ற உயிரினங்களுக்கு கருத்து இல்லை.
குருவி போல் மனிதன் என்றுமே கூடு கட்டமுடியாதுதான், ஆனால் குருவி இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதே வடிவிலான கூட்டை மட்டுமே கட்டும். ஆனால் மனிதன் முன்கூட்டியே சிந்திக்கும் திறன் பெற்றிருப்பதால்தான் அவனால் நீருக்குள்ளும் வீடு கட்ட முடிகிறது.
கருத்து என்பது மனித மூளையின் தன்மை.
கருத்தின் உறுப்பு மனித முளை ஆகும்.
வெளிப்படுத்தாத வரை ஒருவரின் கருத்தை யாராலும் அறிய முடியாது. கருத்து உருவாகும் உறுப்பு மூளை.

அந்த வகையில் கருத்துக்கு மனிதனின் வயது மட்டுமே
ஆனால்
பொருள்களுக்கோ ஆதியும் இல்லை அந்தமும் இல்லை.
எனவே பொருளே முதல் என்பது இதன் மூலம் தெளிவு.
அறிவியல் வளராத காலத்தில் நம்மை சுற்றியுள்ள இந்த பருப்பொருள்கள் (பொருளின் வடிவங்கள்) ஆதியும் அந்தமும் இல்லை என்று சொன்னால் யாரும் நம்பவில்லை, எனவே இவை அனைத்தையும் ஒருவரின் கையில் கொடுத்து அவர்தான் ஆதியும் அந்தமும் இல்லாதவர் என்றனர்.
அந்த ஒருவர் தான் கடவுள்.
அந்த வகையில் கடவுள் வெறும் கருத்துதான்.
ஏனெனில் கடவுளுக்கு சொல்லப்படும் விளக்கம் என்ன?
அவர் புலன்களால் உணரமுடியாதவ்ர்.
எனவே கடவுள் வெறும் கருத்துதான்.
கடவுள் மனிதனால் படைக்கப்பட்டதே ஒழிய மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன் அல்ல.

இயக்கவியல் பொருள் முதல் வாதம் என்றால் என்ன?

-தொடரும்